சனியின் கனிவு
அலுவல் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன், வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்த போது கைப்பேசி மணி அடித்தது, அழைப்பை ஏற்று பேசினேன். என்னுடைய நண்பன் தான். "டேய், என்னடா ஆச்சு?" என்றான். நடந்தவற்றை விவரித்தேன். நடந்தது என்னவென்றால்...
சில நாட்களுக்கு முன்..
என்னுடைய சித்தப்பா என் தந்தைக்கு அழைத்துப் பேசினார். என்னுடைய ஜாதகத்தை அவ்வூர் ஜோதிடரிடம் காண்பித்து கேட்டிருக்கிறார்கள். ஜாதகத்தை கூர்ந்து பார்த்த ஜோதிடர். "இரண்டாம் வீட்டு சனி தான் திருமணத்திற்கு தடை போட்டுக் கொண்டிருக்கின்றார்" என்றும் "சனி ப்ரீத்தி பூஜை செய்துவிட்டால் உடனே திருமணம் நடந்துவிடும்" என்றும் கூறியாதாகவும், மேலும் "இரண்டில் சனி இருக்கும் ஜாதகம் ஆகையால் இரண்டில் சனி இருக்கும் ஜாதகியுடன் தான் திருமணம் நடைபெறும்" என்றும் கூறியதாக தந்தையிடம் தெரிவித்தார். நானோ அதெல்லாம் எதற்கு எனக்கேட்டு மறுத்துவிட்டேன். "நடக்கும் காலம் வந்தால் தானாக நடந்துவிடும் " சாகப்போகும் கிழவியை எதற்கு விஷம் வைத்து கொல்ல வேண்டும்" என்று நையாண்டி செய்து மகிழ்ந்தேன். அப்பாவும் அலட்டிக் கொள்ளவில்லை, அப்படியே விட்டு விட்டார். சில நாட்களில் ஒரு ஜாதகம் வந்தது, ஜாதகம் மட்டும் தான். புகைப்படம் எதுவும் வரவில்லை. ஜாதகத்தை பார்த்ததும் நான் முதலில் பார்த்தது இரண்டாம் வீட்டைத் தான். இரண்டில் சனி!!
இரண்டாம் வீட்டில் சனி என்றதும் அப்பா அம்மாவுக்கு முகத்தில் முறுவல். அப்போது நான் கூறினேன். "பார்த்தீர்களா, இதற்கு போய் எதற்கு பூஜையெல்லாம் செய்ய வேண்டும், நேரம் வரும்போது ஜாதகம் கிடைத்து விட்டது" என்றேன். உடனே அப்பா, பெண் வீட்டிற்கு அழைத்தார், பெண்ணின் தந்தை தான் பேசினார், வழக்கமான சில தகவல்களை பகிர்ந்துகொண்டனர் இருவரும். மறுநாள் பெண்ணின் அப்பா எங்கள் வீட்டிற்கு வந்தார். வீட்டையும் என்னையும் பார்த்துவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். பிறகு கிளம்பும் போது அப்பா அவரிடம் பெண்ணின் புகைப்படம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு அவர், "இல்லை நான் எடுத்து வரவில்லை, சும்மா பார்க்கத்தான் வந்தேன்" என்று சொல்லி சென்றுவிட்டார்.
அவர் போன பிறகு "இவர் சென்றதைப் பார்த்தால் மறுத்து விடுவார்கள் போல் தெரிகிறது" என்றார் அப்பா. பேசிக்கொண்டிருக்கும் போதே அவரிடம் இருந்து அழைப்பு வந்தது, "எனக்கு பிடித்திருக்கிறது நல்ல நாள் பார்த்து வீட்டிற்கு வாருங்கள்" என்றார். முதலில் நான் "நீங்கள் மட்டும் போய் பார்த்து வாருங்கள், நான் வரவில்லை" என்றேன். அப்பாவும் சம்மதம் கூறினார். ஆனால், பெண்ணின் அப்பாவோ, "எதற்கு இழுத்துக் கொண்டே போக வேண்டும், மாப்பிள்ளையை கூட்டி வந்தால் ஒரு வேலை முடிந்துவிடும் அல்லவா? நீங்கள் பார்த்து என்ன ஆகப்போகிறது பெண்ணும் பிள்ளையும் பார்த்துத் தானே முடிவு செய்ய வேண்டும் " என்றார். நானோ சிறிது நேரம் யோசித்தேன், பிறகு சரி வருகிறேன் என ஒப்புக் கொண்டேன்.
அடுத்த நாள் நண்பனிடம் இதைக் கூறினேன். அவன் தான் ஃபாஸ்ட் ட்ராக் டாக்ஸியை பரிந்துரைத்தான். ஃபாஸ்ட் ட்ராக்கை அழைத்து வண்டிக்கு பேசினேன். மூன்று மணி நேரத்திற்கு 840 ரூபாய் என்றனர். சரி என்று மாலை வரும்படி முகவரி கொடுத்தேன். அன்று மாலை அனைவரும் கிளம்பி ஆயத்தமானோம் வண்டி வருவதற்காக காத்திருந்தோம். நேரம் தான் ஆனதே தவிர வண்டி வரவில்லை, ஓட்டுனருக்கு அழைத்து கேட்டேன். வழியில் வண்டி பழுதாகி விட்டதென்றும் மாற்று வண்டிக்கு ஏற்பாடு செய்தாகி விட்டதென்றும் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடும் என்றும் கூறினார். வண்டிப் பழுதானதில் அப்பாவுக்கு கொஞ்சம் மனக்கிலேசம், ஏதோ அபசகுனம் போல் தோன்றியது. இருப்பினும் மாற்று வண்டி வந்ததும் அனைவரும் ஏறி பெண் வீட்டிற்குச் சென்றோம்.
புறப்பட தாமதம் ஆனாலும் குறித்த நேரத்தில் வீட்டிற்கு சென்றோம். இது தான் முதல்முறை ஆதலால் எனக்கு என்னவோ போல இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு பெண்ணை அழைத்து வரச் சொன்னார்கள். கூச்சமா ஆர்வமா தெரியவில்லை, ஒரு உணர்வு என்னை பிடித்துக் கொண்டது. பெண் வந்ததும் எல்லா உணர்வும் போய் ஒரு விடுதலை உணர்வு ஏற்பட்டது. பெண் அழகாகத்தான் இருந்தாள் எனினும் கொஞ்சம் குண்டாக இருந்ததால் எனக்கு பிடிக்கவில்லை. பிறகு அங்கு நடந்தவற்றில் நான் ஆர்வம் காட்டவில்லை, என்னுடைய கவனத்தை என் கையில் இருந்த தட்டில் திருப்பினேன். ஆம், எனக்கு ஒரு தட்டில் வைத்து கொஞ்சம் மிக்சரும் இனிப்பும் கொடுத்திருந்தார்கள், கொஞ்சமும் மிச்சம் இன்றி முழுவதும் சுவைத்து சாப்பிட்டேன். அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம்.
வீட்டிற்கு வந்ததும் "என்ன டா உனக்கு பிடித்திருக்கிறதா?" என்று அப்பா கேட்டார். கோபமாக பார்த்தேன். அப்பா சிரித்தார். "சரி விடு அவர் முன்னரே புகைப்படத்தை காண்பித்திருந்தால் முதலிலேயே சொல்லி இருக்கலாம்" என்றார். "இனி எங்கும் நான் வரமாட்டேன், அவர் எப்படி தனியே வந்து பார்த்து விட்டுச் சென்றார், அது போல நீயும் சென்று பார்த்திருக்க வேண்டும்" என்றேன். "சரி விடு டா" என்றார். பிறகு அக்காவுக்கு அழைத்து நடந்தவற்றை கூறினேன். அக்காவும் "இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம். போய் பார்த்து விட்டால் சம்மதம் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று தேற்றினாள். மறுநாள் காலை பெண்ணின் தந்தை அப்பாவுக்கு அழைத்து பேசினார், "மகன் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்" என்று சுருக்கமாக சொல்லி முடித்தார் அப்பா.
நடந்த இந்த நிகழ்வுகளைத் தான் நண்பனிடம் பேசியில் பகிர்ந்து கொண்டேன். பிறகு வீட்டிற்கு வந்ததும் அப்பா என்னிடம் "இந்தவாரம் ஊருக்கு போக வேண்டும்" என்றார். "ஊருக்கா ? எந்த ஊருக்கு?" எனக்கேட்டேன். "சேலம் போகவேண்டும். சித்தப்பா சொன்னது போலவே, முடிந்துவிடும் என்று நினைத்த இடமும் முடியவில்லை, எனக்கு என்னவோ அங்கே போய் அந்த ஜோதிடரிடம் பூஜை செய்தால், எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று தோன்றுகிறது" என்றார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது.
அக்கா வீட்டில் இப்போது தான் புதிதாக ஒரு "கார்" வாங்கி இருந்தார்கள். "லாங் ட்ரைவ்" போக வேண்டும் என்று சில நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். பேசியை அப்பா எடுத்ததும் "அப்பா, நாங்கள் இந்த வாரம் சேலம் போகலாம் என்றிருக்கிறோம், சித்தப்பா வீட்டிற்கு" என்றாள். அப்பாவுக்கு நெஞ்சம் "திக்" என்றது, "ஏன் என்ன திடீரென்று அங்கே?" எனக்கேட்டார், அதற்கு அக்கா "லாங் ட்ரைவ் போக திட்டம் போட்டுக்கொண்டிருந்தோம் அல்லவா? அதான் சித்தப்பா வீட்டிற்கு சென்று அங்கிருந்து அப்படியே ஏற்காடு செல்லலாம் என்றிருக்கிறோம்" என்றாள். உடனே அப்பா "நாங்களும் இந்த வாரம் அங்கு தான் செல்லலாம் என்றிருக்கிறோம்" என்றார் பூஜையை பற்றி எடுத்துக்கூறி. விஷயத்தை கேட்டதும் அக்காவும் "சரி நாங்களும் வருகிறோம் பூஜைக்கு" என்று கூறி அழைப்பை வைத்தாள். வைத்ததும் அப்பா எங்களிடம் "பார்த்தாயா, நாம் கூறாமலேயே அக்காவும் சேலம் வரத்திட்டம் போட்டிருக்கிறாள், இதில் ஏதோ தெய்வ செயல் இருக்கிறது" என்று தான் அடைந்த "திக்" உணர்வுக்கு விளக்கம் கொடுத்தார்.
சித்தப்பா வீட்டில், அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி, வெகு நாட்களுக்கு பிறகு நாங்கள் அனைவரும் குடும்பமாக அங்கு சென்றதில். முதலில் மாலை போதில் நாங்கள் சென்றோம் பிறகு இரவு அக்காவும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தாள் அவர்களுடைய புதிய காரில். ஜோதிடருக்கு சித்தப்பா அழைத்து மறுநாள் சனிக்கிழமை காலையே அனைவரும் வந்துவிடுவதாகக் கூறி பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யச் சொன்னார். இரவு சாப்பிட்டு முடித்ததும் மொட்டை மாடிக்குச் சென்று அனைவரும் சென்று படுத்தோம். மாடியில் நல்ல காற்று வீசிக்கொண்டிருந்தது, படுத்துக் கொண்டு அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள், என்னுடைய திருமணத்தைப் பற்றித் தான். அப்போது சித்தப்பா அப்பாவிடம் அந்த ஜோதிடரைப் பற்றி பெருமைபட கூறினார். "இதுபோலத்தான் நம்ம பாலாஜிக்கும் இரண்டில் சனி இருந்து திருமணமே நடக்காமல் இருந்தது, பிறகு இவர் தான் சனிப்ரீத்தி செய்துவைத்தார். ஒரே வாரத்தில் முடிந்துவிட்டது" என்றார். எனக்கோ பயணக்களைப்பு, இதமாக காற்று வீசிக்கொண்டிருந்தது, விட்டால் நன்றாக தூங்குவேன், ஆனால் அனைவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். அப்போது நல்ல வேளையாக சித்தி, பேசியது போதும் அனைவரும் உறங்குங்கள் காலை சீக்கிரமே எழுந்து கிளம்ப வேண்டும்" என்றார். அப்படியே அனைவரும் பேச்சை நிறுத்தி உறங்கச் சென்றனர்.
மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து அனைவரும் குளித்து முடித்து ஜோதிடர் சொல்லியிருந்த கோவிலுக்குச் சென்றோம். அது ஒரு சிறு ஆஞ்சநேயர் கோவில். அங்கே ஜோதிடர் எங்களை வரவேற்றார். சனியை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆஞ்சநேயருக்கு உண்டு என்றார். பூஜை துவங்கியது நானும் அமர்ந்தேன். ஒரு அரை மணி நேரம் நடந்திருக்கும். பூஜை முடிந்ததும் ஜோதிடர் அப்பாவிடம் "ஒரு மாதம் நேரம் கொடுங்கள், அதற்குள் திருமணம் முடிந்துவிடும்" என்றார். சரியென்று சொல்லி அங்கிருந்து அனைவரும் விடை பெற்று சித்தப்பா வீட்டிற்கு திரும்பினோம். வீட்டிற்கு வந்ததும் ஏற்காடு பற்றி அக்கா கேட்டாள். ஆனால் சித்தப்பாவோ "இப்போது கிளம்பினால் முடியாது, காலையே கிளம்பியிருந்தால் தான் இரவுக்குள் மலையேறலாம்" என்றார். இப்போது என்ன செய்வது என்று யோசித்தோம். அப்போது சித்தி அருகே இருக்கும் வினாயகா மிஷன் மலைகோவில் பற்றி கூறினார். அங்கே 1008 சிவலிங்கம், ராமர், வெங்கடாஜலபதி மற்றும் இன்னும் நிறைய சந்நிதிகள் இருப்பதாகவும் மாலை அங்கே செல்வோம் என்றும் கூறினார். அனைவரும் இதற்கு இசைவு தெரிவித்தனர். பிறகு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சற்று ஓய்வு எடுத்தோம்.
மாலை அக்கோவிலுக்குச் சென்றோம், அங்கே இருந்த அனைத்து சுவாமி சந்நிதிகளுக்கும் சென்று விட்டு கடைசியாக ஒரு பிள்ளையார் சிலை அருகில் சென்றோம் அங்கே இருந்தவர், மிகவும் சக்திவாய்ந்த பிள்ளையார், நினைத்து நடக்கும் என்றார். உடனே அனைவரும் என்னை சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள சொன்னார்கள். நானும் அப்படியே வேண்டிக்கொண்டேன். இரவு வீடு திரும்பினோம். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அனைவரும் புறப்படத் தயாரானோம். "ஏன் அதற்குள்? நாளை புறப்படலாமே" என்றனர் சித்தப்பாவும் சித்தியும். "இப்போது புறப்பட்டால் தான் இரவுக்குள் வீடு போக முடியும், நாளை அலுவலகம் போக வேண்டும்" என்று கூறி அனைவரும் புறப்பட்டோம் அக்காவின் காரில். நாங்கள் வேலூரில் இறங்கிக்கொண்டோம். அவர்கள் நேரே ஓசூருக்கு சென்றனர். வேலூரில் இருந்து நாங்கள் தாம்பரம் வந்தோம். வீடு வந்து சேர இரவு ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்ததும் அப்பா சித்தப்பாவுக்கு அழைத்து இப்போது தான் வந்து சேர்ந்தோம் என்று கூரினார். அப்போது சித்தப்பா "ஜோதிடர் அப்படித்தான் சொல்வார், ஒரு மாதம் ஆகும் என்று, நீ ஒன்றும் கவலைப்படாதே அண்ணா, ஒரே வாரத்தில் முடிந்துவிடும் பார்" என்றார். இரவு உணவு எதுவும் வேண்டாம் என்று சொல்லி படுத்துவிட்டேன். அனைவருமே டீ குடித்து விட்டு படுத்தார்கள். அவ்வளவு களைப்பு! மறுநாள் திங்கள் கிழமை அலுவலகம் புறப்பட்டுச் சென்றேன். வீட்டிற்கு வந்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி!!!
அப்போது தான் உடைமாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அப்பாவுக்கு ஒரு அழைப்பு வந்தது, கும்பகோனத்தில் இருந்து பேசுவதாக கூறினார்கள், அப்பாவுக்கு யார் என்று தெரியவில்லை, "என்ன மறந்து விட்டீர்களா? ஜாதகம் கொடுத்திருந்தோமே, நாங்கள் பார்த்துவிட்டோம், பொருத்தமாக இருக்கிறது, புகைப்படம் அனுப்பினால் முடிவு செய்துவிடலாம்" என்றதும் அப்பாவும் யாரென தெரியவில்லை என்றாலும் புகைப்படம் அனுப்ப வேண்டிய கைப்பேசி எண்ணை வாங்கிக் கொண்டு அழைப்பை துண்டித்தார். என்னிடம் எண் கொடுத்து புகைப்படம் அனுப்பச் சொன்னார். நானும் புகைப்படமும் ஜாதகமும் அனுப்பிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். அப்போது அப்பா "என்னடா இது, சனிப்ரீத்தி பூஜை அதற்குள் வேலை செய்யத் துவங்கி விட்டதா" என்று சிரித்தார்.
சிறிது நேரத்தில் என்னுடைய கைப்பேசியில் வாட்சப் ஒலி அடித்தது, எடுத்துப் பார்த்தேன். ஜாதகமும் புகைப்படமும் பதிலுக்கு அனுப்பி இருந்தார்கள். முதலில் புகைப்படத்தை தரவிறக்கினேன். தரவிறக்க அளவி புகைப்படத்தின் மீது சுழன்று கொண்டிருந்தது. இதோ முடியப் போகிறது, உள்ளே ஏனோ படபடப்பு, "சனீஸ்வரா, பெண் எனக்கு பிடித்த மாதிரி இருக்கனும்" என வேண்டிக்கொண்டேன். தரவிறக்கம் முழுதும் முடிந்து புகைப்படம் தெரிந்தது, அழகான ஒரு பெண்ணின் முகம், பார்த்ததும் உள்ளம் படபடப்பை மறந்து அமைதியானது. போரில் வெற்றி அடைந்த வீரனைப்போல, தேடிய பொருளை கண்டடைந்தவன் போல, ஒரு மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டது. புகைப்படத்தை அப்பா அம்மாவுக்கு காட்டினேன். பார்த்துவிட்டு பிடித்திருக்கிறதா என்று கேட்டார் அப்பா, "ஃபோட்டோ ஓகே, நேரில் சென்று பார்த்து விட்டு வா, அவர்களுக்கும் பிடித்திருக்கிறதா என்று கேட்டுக்கொள்" என்றேன்.
இரவு சாப்பிடும் போது "ஜாதகத்தையும் புகைப்படத்தையும் அக்காவுக்கும் அனுப்பிவிடு" என்றார் அம்மா, "சாப்பிட்டு முடித்து அனுப்புகிறேன்" என்றேன். சாப்பிட்டு முடித்ததும் படுக்கைக்கு சென்றேன். பேசியை எடுத்து பெண்ணின் புகைப்படத்தையும் ஜாதகத்தையும் அக்காவுக்கு வாட்சப்பில் அனுப்பினேன். பார்த்துவிட்டு, "ஓகே தான் இல்ல?" என்றாள். நானும் "பிக் ஓகே தான், நேரில் சென்று பார்க்க வேண்டும்" என்றேன். பிறகு சிறிது நேரம் அக்காவிடம் பேசிவிட்டு படுக்கையில் சாய்ந்தேன். ஏனோ தெரியவில்லை மீண்டும் பார்க்க வேண்டும் போல் தோன்றியது, பேசியை எடுத்து பெண்ணின் புகைப்படத்தை பார்த்தேன். சனீஸ்வரன் என்மீது காட்டிய கனிவு, என்னவென்று சொல்ல. ஆஹா!! என்ன அழகு, இருவாட்சி மலர் போல இரண்டு முட்டை கண்கள், என்னை விழுங்கி விடுவது போல் பார்த்தன, கண்களின் வசீகரத்தில் இருந்து என்னை விடுவித்து கொள்ள சிறிது நேரம் ஆனது, சற்றே கீழே பார்வையை செலுத்தினேன். அய்யோ! என்ன நேர்த்தியான மூக்கு, கூறிய மூக்கு வேல் போல என் உள்ளத்தை தைத்தது. கொழுத்த கண்ணங்கள் லட்டு போல இருந்தது, மெல்லிய உதடுகள் உயிரையே குடிக்கத் துடிப்பது போல் தோன்றியது. எண்ணங்கள் அலைபாய்வது புரிந்தது, சட்டென்று பேசியை அனைத்து தலையனையில் முகம் புதைத்தேன்.
No comments:
Post a Comment