Saturday, August 19, 2017

சனியின் கனிவு

சனியின் கனிவு

           அலுவல் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன், வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்த போது கைப்பேசி மணி அடித்தது, அழைப்பை ஏற்று பேசினேன். என்னுடைய நண்பன் தான். "டேய், என்னடா ஆச்சு?" என்றான். நடந்தவற்றை விவரித்தேன். நடந்தது என்னவென்றால்...

சில நாட்களுக்கு முன்..

           என்னுடைய சித்தப்பா என் தந்தைக்கு அழைத்துப் பேசினார். என்னுடைய ஜாதகத்தை அவ்வூர் ஜோதிடரிடம் காண்பித்து கேட்டிருக்கிறார்கள். ஜாதகத்தை கூர்ந்து பார்த்த ஜோதிடர். "இரண்டாம் வீட்டு சனி தான் திருமணத்திற்கு தடை போட்டுக் கொண்டிருக்கின்றார்" என்றும் "சனி ப்ரீத்தி பூஜை செய்துவிட்டால் உடனே திருமணம் நடந்துவிடும்" என்றும் கூறியாதாகவும், மேலும் "இரண்டில் சனி இருக்கும் ஜாதகம் ஆகையால் இரண்டில் சனி இருக்கும் ஜாதகியுடன் தான் திருமணம் நடைபெறும்" என்றும் கூறியதாக தந்தையிடம் தெரிவித்தார். நானோ அதெல்லாம் எதற்கு எனக்கேட்டு மறுத்துவிட்டேன். "நடக்கும் காலம் வந்தால் தானாக நடந்துவிடும் " சாகப்போகும் கிழவியை எதற்கு விஷம் வைத்து கொல்ல வேண்டும்" என்று நையாண்டி செய்து மகிழ்ந்தேன். அப்பாவும் அலட்டிக் கொள்ளவில்லை, அப்படியே விட்டு விட்டார். சில நாட்களில் ஒரு ஜாதகம் வந்தது, ஜாதகம் மட்டும் தான். புகைப்படம் எதுவும் வரவில்லை. ஜாதகத்தை பார்த்ததும் நான் முதலில் பார்த்தது இரண்டாம் வீட்டைத் தான். இரண்டில் சனி!!

           இரண்டாம் வீட்டில் சனி என்றதும் அப்பா அம்மாவுக்கு முகத்தில் முறுவல். அப்போது நான் கூறினேன். "பார்த்தீர்களா, இதற்கு போய் எதற்கு பூஜையெல்லாம் செய்ய வேண்டும், நேரம் வரும்போது ஜாதகம் கிடைத்து விட்டது" என்றேன். உடனே அப்பா, பெண் வீட்டிற்கு அழைத்தார், பெண்ணின் தந்தை தான் பேசினார், வழக்கமான சில தகவல்களை பகிர்ந்துகொண்டனர் இருவரும். மறுநாள் பெண்ணின் அப்பா எங்கள் வீட்டிற்கு வந்தார். வீட்டையும் என்னையும் பார்த்துவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். பிறகு கிளம்பும் போது அப்பா அவரிடம் பெண்ணின் புகைப்படம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு அவர், "இல்லை நான் எடுத்து வரவில்லை, சும்மா பார்க்கத்தான் வந்தேன்" என்று சொல்லி சென்றுவிட்டார்.

           அவர் போன பிறகு "இவர் சென்றதைப் பார்த்தால் மறுத்து விடுவார்கள் போல் தெரிகிறது" என்றார் அப்பா.  பேசிக்கொண்டிருக்கும் போதே அவரிடம் இருந்து அழைப்பு வந்தது, "எனக்கு பிடித்திருக்கிறது நல்ல நாள் பார்த்து வீட்டிற்கு வாருங்கள்" என்றார். முதலில் நான் "நீங்கள் மட்டும் போய் பார்த்து வாருங்கள், நான் வரவில்லை" என்றேன். அப்பாவும் சம்மதம் கூறினார். ஆனால், பெண்ணின் அப்பாவோ, "எதற்கு இழுத்துக் கொண்டே போக வேண்டும், மாப்பிள்ளையை கூட்டி வந்தால் ஒரு வேலை முடிந்துவிடும் அல்லவா? நீங்கள் பார்த்து என்ன ஆகப்போகிறது பெண்ணும் பிள்ளையும் பார்த்துத் தானே முடிவு செய்ய வேண்டும் " என்றார். நானோ சிறிது நேரம் யோசித்தேன், பிறகு சரி வருகிறேன் என ஒப்புக் கொண்டேன்.

           அடுத்த நாள் நண்பனிடம் இதைக் கூறினேன். அவன் தான் ஃபாஸ்ட் ட்ராக் டாக்ஸியை பரிந்துரைத்தான். ஃபாஸ்ட் ட்ராக்கை அழைத்து வண்டிக்கு பேசினேன். மூன்று மணி நேரத்திற்கு 840 ரூபாய் என்றனர். சரி என்று மாலை வரும்படி முகவரி கொடுத்தேன். அன்று மாலை அனைவரும் கிளம்பி ஆயத்தமானோம் வண்டி வருவதற்காக காத்திருந்தோம். நேரம் தான் ஆனதே தவிர வண்டி வரவில்லை, ஓட்டுனருக்கு அழைத்து கேட்டேன். வழியில் வண்டி பழுதாகி விட்டதென்றும் மாற்று வண்டிக்கு ஏற்பாடு செய்தாகி விட்டதென்றும் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடும் என்றும் கூறினார். வண்டிப் பழுதானதில் அப்பாவுக்கு கொஞ்சம் மனக்கிலேசம், ஏதோ அபசகுனம் போல் தோன்றியது. இருப்பினும் மாற்று வண்டி வந்ததும் அனைவரும் ஏறி பெண் வீட்டிற்குச் சென்றோம்.

           புறப்பட தாமதம் ஆனாலும் குறித்த நேரத்தில் வீட்டிற்கு சென்றோம். இது தான் முதல்முறை ஆதலால் எனக்கு என்னவோ போல இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு பெண்ணை அழைத்து வரச் சொன்னார்கள். கூச்சமா ஆர்வமா தெரியவில்லை, ஒரு உணர்வு என்னை பிடித்துக் கொண்டது. பெண் வந்ததும் எல்லா உணர்வும் போய் ஒரு விடுதலை உணர்வு ஏற்பட்டது. பெண் அழகாகத்தான் இருந்தாள் எனினும் கொஞ்சம் குண்டாக இருந்ததால் எனக்கு பிடிக்கவில்லை. பிறகு அங்கு நடந்தவற்றில் நான் ஆர்வம் காட்டவில்லை, என்னுடைய கவனத்தை என் கையில் இருந்த தட்டில் திருப்பினேன். ஆம், எனக்கு ஒரு தட்டில் வைத்து கொஞ்சம் மிக்சரும் இனிப்பும் கொடுத்திருந்தார்கள், கொஞ்சமும் மிச்சம் இன்றி முழுவதும் சுவைத்து சாப்பிட்டேன். அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம்.

           வீட்டிற்கு வந்ததும் "என்ன டா உனக்கு பிடித்திருக்கிறதா?" என்று அப்பா கேட்டார். கோபமாக பார்த்தேன். அப்பா சிரித்தார். "சரி விடு அவர் முன்னரே புகைப்படத்தை காண்பித்திருந்தால் முதலிலேயே சொல்லி இருக்கலாம்" என்றார். "இனி எங்கும் நான் வரமாட்டேன், அவர் எப்படி தனியே வந்து பார்த்து விட்டுச் சென்றார், அது போல நீயும் சென்று பார்த்திருக்க வேண்டும்" என்றேன். "சரி விடு டா" என்றார். பிறகு அக்காவுக்கு அழைத்து நடந்தவற்றை கூறினேன். அக்காவும் "இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம். போய் பார்த்து விட்டால் சம்மதம் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று தேற்றினாள். மறுநாள் காலை பெண்ணின் தந்தை அப்பாவுக்கு அழைத்து பேசினார், "மகன் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்" என்று சுருக்கமாக சொல்லி முடித்தார் அப்பா.

           நடந்த இந்த நிகழ்வுகளைத் தான் நண்பனிடம் பேசியில் பகிர்ந்து கொண்டேன். பிறகு வீட்டிற்கு வந்ததும் அப்பா என்னிடம் "இந்தவாரம் ஊருக்கு போக வேண்டும்" என்றார். "ஊருக்கா ? எந்த ஊருக்கு?" எனக்கேட்டேன். "சேலம் போகவேண்டும். சித்தப்பா சொன்னது போலவே, முடிந்துவிடும் என்று நினைத்த இடமும் முடியவில்லை, எனக்கு என்னவோ அங்கே போய் அந்த ஜோதிடரிடம் பூஜை செய்தால், எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று தோன்றுகிறது" என்றார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது.

           அக்கா வீட்டில் இப்போது தான் புதிதாக ஒரு "கார்" வாங்கி இருந்தார்கள். "லாங் ட்ரைவ்" போக வேண்டும் என்று சில நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். பேசியை அப்பா எடுத்ததும் "அப்பா, நாங்கள் இந்த வாரம் சேலம் போகலாம் என்றிருக்கிறோம், சித்தப்பா வீட்டிற்கு" என்றாள். அப்பாவுக்கு நெஞ்சம் "திக்" என்றது, "ஏன் என்ன திடீரென்று அங்கே?" எனக்கேட்டார், அதற்கு அக்கா "லாங் ட்ரைவ் போக திட்டம் போட்டுக்கொண்டிருந்தோம் அல்லவா? அதான் சித்தப்பா வீட்டிற்கு சென்று அங்கிருந்து அப்படியே ஏற்காடு செல்லலாம் என்றிருக்கிறோம்" என்றாள். உடனே அப்பா "நாங்களும் இந்த வாரம் அங்கு தான் செல்லலாம் என்றிருக்கிறோம்" என்றார் பூஜையை பற்றி எடுத்துக்கூறி. விஷயத்தை கேட்டதும் அக்காவும் "சரி நாங்களும் வருகிறோம் பூஜைக்கு" என்று கூறி அழைப்பை வைத்தாள். வைத்ததும் அப்பா எங்களிடம் "பார்த்தாயா, நாம் கூறாமலேயே அக்காவும் சேலம் வரத்திட்டம் போட்டிருக்கிறாள், இதில் ஏதோ தெய்வ செயல் இருக்கிறது" என்று தான் அடைந்த "திக்" உணர்வுக்கு விளக்கம் கொடுத்தார்.

           சித்தப்பா வீட்டில், அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி, வெகு நாட்களுக்கு பிறகு நாங்கள் அனைவரும் குடும்பமாக அங்கு சென்றதில். முதலில் மாலை போதில் நாங்கள் சென்றோம் பிறகு இரவு அக்காவும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தாள் அவர்களுடைய புதிய காரில். ஜோதிடருக்கு சித்தப்பா அழைத்து மறுநாள் சனிக்கிழமை காலையே அனைவரும் வந்துவிடுவதாகக் கூறி பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யச் சொன்னார். இரவு சாப்பிட்டு முடித்ததும் மொட்டை மாடிக்குச் சென்று அனைவரும் சென்று படுத்தோம். மாடியில் நல்ல காற்று வீசிக்கொண்டிருந்தது, படுத்துக் கொண்டு அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள், என்னுடைய திருமணத்தைப் பற்றித் தான். அப்போது சித்தப்பா அப்பாவிடம் அந்த ஜோதிடரைப் பற்றி பெருமைபட கூறினார். "இதுபோலத்தான் நம்ம பாலாஜிக்கும் இரண்டில் சனி இருந்து திருமணமே நடக்காமல் இருந்தது, பிறகு இவர் தான் சனிப்ரீத்தி செய்துவைத்தார். ஒரே வாரத்தில் முடிந்துவிட்டது" என்றார். எனக்கோ பயணக்களைப்பு, இதமாக காற்று வீசிக்கொண்டிருந்தது, விட்டால் நன்றாக தூங்குவேன், ஆனால் அனைவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். அப்போது நல்ல வேளையாக சித்தி, பேசியது போதும் அனைவரும் உறங்குங்கள் காலை சீக்கிரமே எழுந்து கிளம்ப வேண்டும்" என்றார். அப்படியே அனைவரும் பேச்சை நிறுத்தி உறங்கச் சென்றனர்.

           மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து அனைவரும் குளித்து முடித்து ஜோதிடர் சொல்லியிருந்த கோவிலுக்குச் சென்றோம். அது ஒரு சிறு ஆஞ்சநேயர் கோவில். அங்கே ஜோதிடர் எங்களை வரவேற்றார். சனியை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆஞ்சநேயருக்கு உண்டு என்றார். பூஜை துவங்கியது நானும் அமர்ந்தேன். ஒரு அரை மணி நேரம் நடந்திருக்கும். பூஜை முடிந்ததும் ஜோதிடர் அப்பாவிடம் "ஒரு மாதம் நேரம் கொடுங்கள், அதற்குள் திருமணம் முடிந்துவிடும்" என்றார். சரியென்று சொல்லி அங்கிருந்து அனைவரும் விடை பெற்று சித்தப்பா வீட்டிற்கு திரும்பினோம். வீட்டிற்கு வந்ததும் ஏற்காடு பற்றி அக்கா கேட்டாள். ஆனால் சித்தப்பாவோ "இப்போது கிளம்பினால் முடியாது, காலையே கிளம்பியிருந்தால் தான் இரவுக்குள் மலையேறலாம்" என்றார். இப்போது என்ன செய்வது என்று யோசித்தோம். அப்போது சித்தி அருகே இருக்கும் வினாயகா மிஷன் மலைகோவில் பற்றி கூறினார். அங்கே 1008 சிவலிங்கம், ராமர், வெங்கடாஜலபதி மற்றும் இன்னும் நிறைய சந்நிதிகள் இருப்பதாகவும் மாலை அங்கே செல்வோம் என்றும் கூறினார். அனைவரும் இதற்கு இசைவு தெரிவித்தனர். பிறகு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சற்று ஓய்வு எடுத்தோம்.

           மாலை அக்கோவிலுக்குச் சென்றோம், அங்கே இருந்த அனைத்து சுவாமி சந்நிதிகளுக்கும் சென்று விட்டு கடைசியாக ஒரு பிள்ளையார் சிலை அருகில் சென்றோம் அங்கே இருந்தவர், மிகவும் சக்திவாய்ந்த பிள்ளையார், நினைத்து நடக்கும் என்றார். உடனே அனைவரும் என்னை சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள சொன்னார்கள். நானும் அப்படியே வேண்டிக்கொண்டேன். இரவு வீடு திரும்பினோம். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அனைவரும் புறப்படத் தயாரானோம். "ஏன் அதற்குள்? நாளை புறப்படலாமே" என்றனர் சித்தப்பாவும் சித்தியும். "இப்போது புறப்பட்டால் தான் இரவுக்குள் வீடு போக முடியும், நாளை அலுவலகம் போக வேண்டும்" என்று கூறி அனைவரும் புறப்பட்டோம் அக்காவின் காரில். நாங்கள் வேலூரில் இறங்கிக்கொண்டோம். அவர்கள் நேரே ஓசூருக்கு சென்றனர். வேலூரில் இருந்து நாங்கள் தாம்பரம் வந்தோம். வீடு வந்து சேர இரவு ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்ததும் அப்பா சித்தப்பாவுக்கு அழைத்து இப்போது தான் வந்து சேர்ந்தோம் என்று கூரினார். அப்போது சித்தப்பா "ஜோதிடர் அப்படித்தான் சொல்வார், ஒரு மாதம் ஆகும் என்று, நீ ஒன்றும் கவலைப்படாதே அண்ணா, ஒரே வாரத்தில் முடிந்துவிடும் பார்" என்றார். இரவு உணவு எதுவும் வேண்டாம் என்று சொல்லி படுத்துவிட்டேன். அனைவருமே டீ குடித்து விட்டு படுத்தார்கள். அவ்வளவு களைப்பு! மறுநாள் திங்கள் கிழமை அலுவலகம் புறப்பட்டுச் சென்றேன். வீட்டிற்கு வந்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி!!!

           அப்போது தான் உடைமாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அப்பாவுக்கு ஒரு அழைப்பு வந்தது, கும்பகோனத்தில் இருந்து பேசுவதாக கூறினார்கள், அப்பாவுக்கு யார் என்று தெரியவில்லை, "என்ன மறந்து விட்டீர்களா? ஜாதகம் கொடுத்திருந்தோமே, நாங்கள் பார்த்துவிட்டோம், பொருத்தமாக இருக்கிறது, புகைப்படம் அனுப்பினால் முடிவு செய்துவிடலாம்" என்றதும் அப்பாவும் யாரென தெரியவில்லை என்றாலும் புகைப்படம் அனுப்ப வேண்டிய கைப்பேசி எண்ணை வாங்கிக் கொண்டு அழைப்பை துண்டித்தார். என்னிடம் எண் கொடுத்து புகைப்படம் அனுப்பச் சொன்னார். நானும் புகைப்படமும் ஜாதகமும் அனுப்பிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். அப்போது அப்பா "என்னடா இது, சனிப்ரீத்தி பூஜை அதற்குள் வேலை செய்யத் துவங்கி விட்டதா" என்று சிரித்தார்.

           சிறிது நேரத்தில் என்னுடைய கைப்பேசியில் வாட்சப் ஒலி அடித்தது, எடுத்துப் பார்த்தேன். ஜாதகமும் புகைப்படமும் பதிலுக்கு அனுப்பி இருந்தார்கள். முதலில் புகைப்படத்தை தரவிறக்கினேன். தரவிறக்க அளவி புகைப்படத்தின் மீது சுழன்று கொண்டிருந்தது. இதோ முடியப் போகிறது, உள்ளே ஏனோ படபடப்பு, "சனீஸ்வரா, பெண் எனக்கு பிடித்த மாதிரி இருக்கனும்" என வேண்டிக்கொண்டேன். தரவிறக்கம் முழுதும் முடிந்து புகைப்படம் தெரிந்தது, அழகான ஒரு பெண்ணின் முகம், பார்த்ததும் உள்ளம் படபடப்பை மறந்து அமைதியானது. போரில் வெற்றி அடைந்த வீரனைப்போல, தேடிய பொருளை கண்டடைந்தவன் போல, ஒரு மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டது. புகைப்படத்தை அப்பா அம்மாவுக்கு காட்டினேன். பார்த்துவிட்டு பிடித்திருக்கிறதா என்று கேட்டார் அப்பா, "ஃபோட்டோ ஓகே, நேரில் சென்று பார்த்து விட்டு வா, அவர்களுக்கும் பிடித்திருக்கிறதா என்று கேட்டுக்கொள்" என்றேன்.

           இரவு சாப்பிடும் போது "ஜாதகத்தையும் புகைப்படத்தையும் அக்காவுக்கும் அனுப்பிவிடு" என்றார் அம்மா, "சாப்பிட்டு முடித்து அனுப்புகிறேன்" என்றேன். சாப்பிட்டு முடித்ததும் படுக்கைக்கு சென்றேன். பேசியை எடுத்து பெண்ணின் புகைப்படத்தையும் ஜாதகத்தையும் அக்காவுக்கு வாட்சப்பில் அனுப்பினேன். பார்த்துவிட்டு, "ஓகே தான் இல்ல?" என்றாள். நானும் "பிக் ஓகே தான், நேரில் சென்று பார்க்க வேண்டும்" என்றேன். பிறகு சிறிது நேரம் அக்காவிடம் பேசிவிட்டு படுக்கையில் சாய்ந்தேன். ஏனோ தெரியவில்லை மீண்டும் பார்க்க வேண்டும் போல் தோன்றியது, பேசியை எடுத்து பெண்ணின் புகைப்படத்தை பார்த்தேன். சனீஸ்வரன் என்மீது காட்டிய கனிவு, என்னவென்று சொல்ல. ஆஹா!! என்ன அழகு, இருவாட்சி மலர் போல இரண்டு முட்டை கண்கள், என்னை விழுங்கி விடுவது போல் பார்த்தன, கண்களின் வசீகரத்தில் இருந்து என்னை விடுவித்து கொள்ள சிறிது நேரம் ஆனது, சற்றே கீழே பார்வையை செலுத்தினேன். அய்யோ! என்ன நேர்த்தியான மூக்கு, கூறிய மூக்கு வேல் போல என் உள்ளத்தை தைத்தது. கொழுத்த கண்ணங்கள் லட்டு போல இருந்தது, மெல்லிய உதடுகள் உயிரையே குடிக்கத் துடிப்பது போல் தோன்றியது. எண்ணங்கள் அலைபாய்வது புரிந்தது, சட்டென்று பேசியை அனைத்து தலையனையில் முகம் புதைத்தேன்.

Sunday, July 23, 2017


2. பெண்டாட்டி தாசன்


              காலையில் எழுந்ததும் முதல்வேலையாக அலைப்பேசியை எடுத்து வாட்சப்பை திறந்தேன். முழுக்க வாழ்த்துச் செய்திகள். ஆம், ஆவனி எட்டு, இன்றெனக்கு பிறந்தநாள். எல்லா வாழ்த்துக்கும் நன்றி தெரிவித்து விட்டு கடைசியாக அக்காவின் வாழ்த்துச் செய்தியை பார்த்தேன். வாழ்த்தே ஒரு வகையாக இருந்தது. "இந்த ஆண்டுக்குள் உனக்கு திருமணம் நடந்துவிடும்" என்றும் "இனி எல்லாமே உனக்கு நல்லதாகவே தான் நடக்கும்" என்றும் வாழ்த்து அனுப்பி இருந்தாள். "இது என்ன முன்னுக்கு பின் முரணாக இப்படி ஒரு வாழ்த்து அனுப்பி இருக்கிறாள் அக்கா?, திருமணம் நடந்துவிட்டால், பிறகு நடக்கும் நல்லதும் நாசமாக அல்லவா போகும்" என நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். 

              ஆம், மூன்று மாதங்களுக்கு முன் தனக்கு குழந்தை பிறந்ததும் எனக்கு பெண் பார்க்கும் வேலையை துவங்கச்சொல்லி, இனியும் நேரம் கடத்தினால் பிறகு இவனுக்கு திருமணமே நடக்காது என்றொரு குண்டை போட்டு அப்பா அம்மாவை அதிரிரச் செய்தாள் அக்கா. "நானா வேண்டாம் என்கிறேன், இவன் தான் இப்போது வேண்டாம் என்கிறான்" என்றார் அப்பா. நான் திருமணம் செய்யாமல் எவ்வித பொறுப்புமின்றி  மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதில் அக்காவுக்கு கொஞ்சம் வயிற்றெரிச்சல். எப்போது வீட்டுக்கு வந்தாலும் என்னுடைய திருமணப் பேச்சு தான். இம்முறை குழந்தை பிறந்த போது வந்திருந்த உறவினர்களும் திருமணப் பேச்சை எடுத்ததால், எப்படியும் என்னை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தாள்.

              எனக்கோ, என்ன தான் அதை நினைத்தால் சற்று குறுகுறுப்பாக இருந்தாலும் இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை, வேண்டாம் என்று வழக்கமான பதிலை தந்தேன். "இப்போது தொடங்கினால் தான் ஓராண்டுக்குள் முடியும்" என்று மேலும் உறுதியுடன் கூறினாள் அக்கா, அதற்கு நானோ "எனக்கெல்லாம் அப்படி ஆகாது, எந்த எதிர்பார்ப்பும் இல்லை, ஆகையால் முதலில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்வேன்" என்றும் "இப்போது பார்த்தால், இப்போதே முடிந்துவிடும், என்னை விட வயதில் பெரிய என் நண்பர்களுக்கே இன்னும் திருமணம் ஆகவில்லை, அதனால் கொஞ்சம் காலம் ஆகட்டும்" என்றேன். ஆனால் அக்கா விடுவதாக இல்லை, இம்முறை மாமாவிடம் வேறு மாட்டிவிட்டாள், எப்போதும் அவர் இது பற்றி பேச மாட்டார். ஆனால் இம்முறை அவரும் என்னிடம் கேட்டார். நானோ எனக்கெதற்கு இப்போது திருமணம் என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில், என்னால் எதுவும் பேச இயலவில்லை. 

              "எதற்கென்றால் என்ன, இதற்கெல்லாமா காரணம் வேண்டும், வாழைப்பழம் பழுத்தால் உரித்து சாப்பிட வேண்டியது தான்" என்றார். அதிர்ந்து போனேன். "அதெல்லாம் இல்லை" என்றேன், இதழ்களில் மெல்லிய சிரிப்போடு. பிறகு அப்பாவிடம் "மாமா, இவன் இப்படி தான் சொல்வான், நீங்கள் பெண் பார்க்கும் வேலையை துவங்குங்கள், அப்போது தான் அவனுக்கும் அதில் ஒரு ஆர்வம் வரும்" என்றார். மாமா சொன்னதும் சரிதான் என்னும் முடிவுக்கு வந்து விட்டார் அப்பா, "சரி பார்த்துவிடுவோம்" என்றார். என்னை சிக்க வைத்துவிட்டதில் பெருத்த மகிழ்ச்சி அக்காவுக்கு. அந்த மகிழ்ச்சியுடனே ஊருக்கு கிளம்பிச் சென்றாள்.

              அக்கா ஊருக்கு கிளம்பிச் சென்றதும் உறவினர்களிடத்தில் எல்லாம் சொல்லி வைத்தார்கள், எனக்கு பெண் பார்க்கும் செய்தியை. சிறிது நாட்களில் ஒரு பெண் வீட்டில் இருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது, பெண்ணின் தந்தையுடன் அப்பா அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த நேரம் எனக்கு ஏதோ செய்தது. படபடப்புடன் அவர்களின் அலைப்பேசி உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தேன், முதலில் என்னை பற்றிய விவரங்களை கொடுத்தார். பிறகு ஜாதகத்தையும் புகைப்படத்தையும் அனுப்பி வைப்பதாகவும் பதிலுக்கு தாங்களும் பெண்ணின் புகைப்படமும் ஜாதகமும் அனுப்பி வையுங்கள் என்றும், கூறி முடித்தார்.

              ஒரு காகிதமும் பேனாவும் கொடுத்து என்னுடைய ஜாதகத்தை அழகாக எழுதச் சொன்னார் அப்பா. நானோ அதெல்லாம் வேண்டாம் என்று என்னுடைய கைப்பேசியில் நோட்ஸ் அப்ளிகேஷனில் ஜாதகத்தை எழுதி அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து என்னுடைய புகைப்படத்தையும் - ஆம், சற்று அழகாக இருக்கும் புகைப்படத்தை தேடி எடுத்து பெண்ணின் தந்தைக்கு வாட்சப்பில் அனுப்பி வைத்தேன். சிறிது நேரத்தில் கைப்பேசியில் மணி அடித்தது. அப்பாவும் அம்மாவும் மிகவும் ஆர்வம் காட்டினார்கள், நான் ஒரு வித பதற்றத்துடன் பேசியை எடுத்து வாட்சப்பை திறந்தேன். பதற்றம் நீங்கி நிம்மதியுடன் மூச்சு விட்டேன். 

              மிகவும் குண்டாக ஒரு பெண்ணின் புகைப்படம். பார்த்ததும் என்ன சொல்வதென்று தெரியாமல் அப்பாவிடம் கொடுத்தேன், அவர் என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன், அவருடைய டேஸ்ட் எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?. அப்பாவும் அம்மாவும் வாங்கி பார்த்து விட்டு எதுவும் சொல்லவில்லை. "சரி, பிறகு என்ன ஜோசியரிடம் போய் பொருத்தம் பார்க்கலாமா" என்றார். பேரதிர்ச்சிக்குள்ளானேன். இனியும் அமைதியாக இருந்தால் எல்லாம் வீணாக போய்விடும் என்று முடிவு செய்து என்னுடைய விருப்பத்தை கூறினேன்.

              "ஒல்லியான உயரமான பெண்ணைத்தான் நான் திருமணம் செய்வேன் என்றும் எப்படி இருந்தாலும் சரியென சொல்வேன் என்று நினைக்க வேண்டாம்" என்றும் கோபமாக கூறினேன். " ம்ம்ம், இப்படி சொன்னால் தானே தெரியும். அப்படியே பார்த்துவிடுவோம், இந்த பெண் வேண்டாம் என்றால் விட்டு விடுவோம் " என்று சாதாரனமாக கூறினார் அப்பா. நானோ "அதெப்படி ஜாதகம் பார்க்கலாமா? எனக்கேட்கலாம், இந்த பெண் பார்ப்பதற்கு என்னை விட பெரிய பெண்ணாக தோன்றுகிறாள், இருந்தும் ஜாதகம் பார்க்க முடிவெடுத்தால் என்ன நியாயம்" என்றேன் கடும் கோபத்துடன். 

              "டேய், புகைப்படமும்  ஜாதகமும் வந்த பிறகு ஜோசியரிடம் போய் காட்டி ஜாதகப் பொருத்தம் பார்ப்பது தான் உலக வழக்கம்" என்றார்.  "அதெல்லாம் ஒன்றும் இல்லை, முதலில் என்னைக் கேட்க வேண்டும், எனக்கு பிடித்திருந்தால் தான் ஜோசியரிடம் போக வேண்டும்" என்றும் "நான் இந்த பெண்ணை ரிஜக்ட் செய்கிறேன்" என்றும் சீற்றத்துடன் கூறினேன். அப்பாவின் டேஸ்ட் சரி யில்லை, ஏதோ ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விடுவார் எனும் பயத்தில் நான் கோபமடைந்து கூறினேன். ஆனால் அப்பாவோ, "சரி விடு, இதற்கு ஏன் கத்துகிறாய்" , என்று கூலாக கூறிவிட்டு நகர்ந்தார்.

              மேற்சொன்ன நிகழ்ச்சி நடந்தது முதல் இன்று வரை நிறைய பெண்களை நான் ரிஜக்ட் செய்து விட்டேன், இப்போது அப்பாவுக்கே புரிந்து விட்டது என்னுடைய டேஸ்ட், அவரே பார்த்ததும் முடிவு செய்து விடுகிறார், "என்ன ரிஜக்டடா" என்றும் கேட்கிறார். மூன்று மாதங்களாக இப்படியே தான் நடக்கிறது, அதனால் நான் வருத்தத்தில் இருப்பேன் என்று நினைத்தாளோ என்னவோ இப்படி ஒரு வாழ்த்து அனுப்பி இருக்கிறாள் அக்கா. உண்மையில் நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை, தள்ளிப்போவதில் மகிழ்ச்சியே.

              வாட்சப் வாழ்த்தை படித்துக் கொண்டிருக்கும் போதே அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது, நான் பேசாமல் அம்மாவிடம் கொடுத்து "உன் பொண்ணு தான் பேசுறா, பேசு" என்றேன். அம்மாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அப்பாவிடம் பேசினாள் அக்கா. "இப்படியே இருந்தாள் எப்படி, சிவா ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்து எப்போது திருமணம் நடக்கும் என்று விசாரியுங்கள்" என்று கூறினாள். அதுவும் சரிதான் என்றும் "நாமே பார்த்துக் கொண்டிருக்கிறோம், இவனுக்கு திருமண யோகம் வந்துவிட்டதா என்பது கூட தெரியவில்லை, ஆகவே ஜாதகம் பார்க்கத்தான் வேண்டும்" என்றும் முடிவுக்கு வந்தார் அப்பா.

              இரண்டு நாட்கள் கழித்து நானும் அப்பாவும் என்னுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றோம். அப்பாவுக்கு இதிலெல்லாம் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது, எனக்கோ சுத்தமாக இல்லை. உள்ளே நுழைந்ததும் வணக்கம் கூறினார் ஜோதிடர், பதிலுக்கு நானும் வணங்கினேன். அப்பாவைப் பார்த்து "நீங்கள் வந்த நேரம் 5.20, இந்த நேரத்தில் இன்னின்ன கோள்கள் இன்னின்ன இடத்தில் இருக்கின்றன" என்று ஜோதிட சொற்களில் கூறி, "ஆகவே பிரவேச  நேரக் கணிப்பு படி நீங்கள் இப்போது தம்பியின் வேலைவாய்ப்பும் குடும்ப நிலையும் பற்றி அறிந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்" என்றார். எனக்கோ குபுக்கென்று சிரிப்பு வந்தது, அடக்கிக் கொண்டேன்.

              சும்மா இருந்திருந்தால் நாமே கூறியிருப்போமே, இவர் தேவையில்லாமல் பிரவேச நேரத்தை கணித்து இப்படி மொக்கை வாங்கி விட்டாரே என்று நினைத்துக் கொண்டு அப்பாவை நக்கல் பார்வை ஒன்று பார்த்தேன். அப்பா எதுவும் சொல்லவில்லை, பிறகும் கூட ஜோதிடர் எங்களிடம் எதை பற்றி அறிய வந்திருக்கிறோம் என்று கேடகாமல் அவரே தொடர்ந்தார். எதிரே இருந்த பெரிய பலகையில் என்னுடைய ஜாதகத்தை எழுதி "இது தான் லக்னம், அதற்கு அடுத்து இரண்டாவதாக இருக்கும் கட்டம் குடும்பஸ்தானம்" என்று வரிசையாக பன்னிரண்டு கட்டங்களுக்கும் ஒரு பெயரைச்சொல்லி ஜோதிட வகுப்பு எடுக்க தொடங்கினார். ஏழாம் கட்டத்தை காட்டி, "இது தான் திருமணஸ்தானம்" என்றதும் கொஞ்சம் கவனம் செலுத்தினேன். ஏழாம் கட்டத்தின் அதிபதி இருக்கும் நிலை, கட்டத்தில் இருக்கும் கிரகம் மற்றும் கட்டம் பெறும் பார்வை என்று ஏதேதோ சொல்லி விட்டு, அதன் பலங்களை கூறத்தொடங்கினார். தம்பி இரண்டு வருடத்திற்கு முன் காதல் வலையில் விழுந்துவிட்டார் என்றும் காதல் திருமணம் தான் இவருக்கு நடக்கும் என்றும் அப்படித்தான் வரம் வாங்கி வந்திருக்கிறார் என்றார். அப்பா என்பக்கம் முகத்தை திருப்பி மேலும் கீழும் பார்த்தார். நான் ஒன்றும் சொல்லவில்லை, ஜோதிடர் பக்கம் பார்வையை திருப்பினேன்.

              பிறகு ஏனைய கட்டங்களின் நிலையையும் பலங்களையும் கூறி முடித்து, சிக்கலான பாடத்தை சுலபமாக சொல்லிக் கொடுத்து முடித்த பள்ளி ஆசிரியரைப் போல பெருமிதத்துடன் இருக்கையில் வந்து அமர்ந்தார். "நான் தான் பேசிக்கொண்டே இருக்கிறேன், நீங்கள் எதுவுமே கேட்கவில்லையே என்றார். அப்போது அப்பா, "நங்கள் வந்ததே திருமணம் பற்றி அறியத்தான், ஆனால் நீங்களோ முதலில் வந்ததும் பிரவேச கணிப்பில், வேலைவாய்ப்பும் குடும்பமும் என்றீர்கள்" என்றார். உடனே இடைமறித்த ஜோதிடர் "நான் தான் குடும்பம் என்று சொன்னேனே குடும்பத்தில் தான் திருமணமும் அடக்கம்" என்றார் பதற்றத்துடன். அப்பா அமைதி ஆனார். அப்போது நான் பேச்சை தொடர்ந்தேன். "இல்லை இல்லை, நீங்கள் சொன்னபடி வேலைவாய்ப்பு லக்னத்தில் இருந்து பத்தாம் ஸ்தானம், குடும்பம் இரண்டாம் ஸ்தானம், நாங்கள் வந்தது ஏழாம் ஸ்தானம் ஆகிய திருமணத்தை பற்றி அறிந்து கொள்ள" என்று கிடிக்கிப்பிடியில் சிக்க வைத்தேன். பேரதிர்ச்சிக்கு உள்ளானார் ஜோதிடர்.

              ஜோதிடர் முகத்தில் ஈயாடியது, அவரை சிக்கவைத்த மகிழ்ச்சி என் முகத்தில் முறுவலாய் பூத்தது. இவ்வளவு விளக்கமாக பாடம் எடுத்து மொக்கை போட்டது எவ்வளவு பெரிய பிழை என்பதை தற்போது உணர்ந்திருப்பார் ஜோதிடர் என்று நினைத்தேன். ஆனால் அவரோ மீண்டும் எழுந்து பலகையின் அருகில் சென்று என்னை வாயடைக்கச் செய்தார். இது என்னடா இது, மீண்டும் மொக்கை போட எழுந்துவிட்டாரே என்று மிரண்டு போனேன். "இல்லை தம்பி திருமணம் என்று வரும் போது வெறுமனே ஏழாம் வீட்டை மட்டும் பார்க்கக்கூடாது, அதனுடன் குடும்பத்தைக் குறிக்கும் இரண்டாம் வீட்டையும், கூடவே பன்னிரண்டாம் வீடான அயன சயன வீட்டையும் சேர்த்தே தான் பார்க்க வேண்டும்" என்று சமாளித்தார். 

              "முதலில் நான் சொன்னது மேலோட்டமாக, இப்போது ஏழாம் வீட்டின் பிரத்தேய பலங்களை கூறுகிறேன் கேளுங்கள்" என்று தொடர்ந்தார். இம்முறை பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்த்தேன். "தம்பி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் காதலில் விழுந்துவிட்டீர்கள், என்று கட்டம் சொல்கிறது" என்று என்னைப் பார்த்தார். "காதலில் விழுந்தால் நாங்கள் ஏன் உங்களிடம் வருகிறோம்" என்றேன், "மூன்று மாதங்களாக பெண் பார்க்கிறோம், ஒன்றும் அமையவில்லை" என்றார் அப்பா. சற்று கோபமடைந்தார் ஜோதிடர் என்றே கருதுகிறேன், காரணம் தொடர்ந்து அவர் கூறிய சொற்கள் அப்படி. "சரி தம்பி உன்னுடைய ஜாதகப்படி நீ மாமியார் வீட்டோடு மருமகனாவாய், திருமணத்திற்கு பிறகு அப்பா அம்மாவிடம் அதிகம் ஒட்டாமல் மாமனார் மாமியாரோடு போய்விடுவாய், பெண்டாட்டி தாசனாகத்தான் வாழப்போகிறாய்" என்று உச்சஸ்தாயியில் முழங்கினார். 

              பெண்டாட்டி தாசன் என்று சொன்னதும் அப்பாவை பார்த்தேன், சந்தேகமும் ஏளனமும் கலந்த பார்வை ஒன்றை என்மீது வீசினார் அப்பா. "இவர் ஏன் நம்மை  இப்படி பார்க்கிறார், ஒரு வேளை இந்த ஜோதிடர் கூறிய வார்த்தைகளை நம்பி விட்டாரோ" என்று யோசித்தேன். "அதெல்லாம் இருக்காது" என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன், இருந்தாலும் "இவரு வேஸ்ட்டு பா, முதலில் இருந்தே எதையும் சரியாக கூறவில்லை" எனக்கூறி என்ன சொல்கிறார் பார்க்கலாம் என்று நினைத்தேன். அப்பாவின் பதில், என்ன சொல்வதென்றே தெரியாமல், திருதிருவென முழித்தேன். "அதெல்லாம் சரிதான், அவர் எதையும் சரியாகத்தான் சொல்லவில்லை, என்றாலும், பெண்டாட்டி பேச்சைக் கேட்டு ஆடக்கூடியன் போலத்தான் இருக்கிறது உன்னுடைய முழி" என்றார், முகத்தில் ஏளனம் கூட்டி. 

              உடனே "சரி வாப்பா, வீட்டுக்கு போகலாம்" என்று  ஹெல்மட்டை அணிந்து கண்ணாடியை இழுத்து விட்டு முகத்தை மூடினேன் குறிப்பாக முழியை மூடினேன். அப்பா வண்டியில் ஏறியதும் எதுவும் பேசாமல் அதிவேகமாக வீட்டுக்கு விரைந்தேன்.







Thursday, July 13, 2017

1. நிலவின் வருகை


சித்திரை திங்கள் முழுமதி நாளில்
அத்தனை விண்மீன் அரண் உடைத்தே
வான்விட் டிறங்கி வான்னில வும்
தானே வந்தது தரணிக் கே

               தாம்பரம் பேருந்து நிலையம், வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. காரணம் அன்று சித்திரை முழுமதி, அனைத்து பேருந்துகளும் திருவண்ணாமலை நோக்கி திருப்பி விடப்பட்டிருந்தது, எனினும் கூட்டத்தின் தேவையை நிறைவு செய்ய போதவில்லை. மிக நீண்ட வரிசையில் நின்று ஒருவழியாக நானும் என் நண்பர்களும் பயணச்சீட்டு பெற்று பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தோம். கிரிவலம் போகவேண்டும் என்பது எங்களுடைய வெகுநாள் ஆசை. இன்றைக்கு அது நிறைவேறப் போகிறது.


               சற்று நேரத்தில் பேருந்து புறப்பட்டு பெருங்களத்தூரை அடைந்தது, அங்கேயும் கொஞ்சம் கூட்டம் ஏறியது. அப்போது என் தந்தை எனக்கு அலைப்பேசியில் அழைத்தார். அக்காவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றார். அக்காவுக்கு இது இரண்டாவது குழந்தை, முதலில் ஒரு ஆண் குழந்தை, எனவே பெண் பிறந்ததில் அனைவருக்குமே மகிழ்ச்சி. "நான் திரும்பி வந்துவிடவா, பேருந்து பெருங்களத்தூரில் தான் இருக்கிறது" என்றேன். "வேண்டாம் வேண்டாம், குழந்தை பிறந்துவிட்டது தாயும் சேயும் நலம் தான். எதுவும் சிக்கல் இல்லை, நீ கோவிலுக்கு சென்று காலையே வா" என்றார். குழந்தை பிறந்த செய்தியை நண்பர்களுக்கும் கூறி மகிழ்ந்தேன்.


               இரவு ஏறியது, வானில் நிலவும் தண்ணொளி வீசத் தொடங்கியது. தன் வெள்ளி ஒளியால் பூமியெங்கும் வெள்ளி முலாம் பூசியது போல் ஆக்கியது. கிரிவலப் பாதை எப்படியும் பதினேழு கிலோ மீட்டர் இருக்கும், கோடைக்காலத்தில் இரவு நேரத்தில் நடந்து செல்வது நன்றாக இருந்தது. கிரிவலப்பாதை எங்கும் கடைகள். பழச்சாறுக்கடை, உணவுக்கடை என எல்லாமே அங்கே இருந்தது. நாங்கள் எதுவும் சாப்பிடவில்லை. ஆங்காங்கே லெமன் சோடா மட்டும் பருகிக் கொண்டு பயணம் தொடர்ந்தோம், பல கதைகள் பேசிக்கொண்டு நடந்தோம். வழியில் சில இளம் ஜோடிகள் தோள் மீது கை போட்டுக்கொண்டு காதல் மொழி பேசிச்சென்றனர். அவர்களை பார்த்து பொருமினேன் நான். திருமணத்திற்கு பிறகு நானும் இவர்களை போலவே என்னுடைய இணையுடன் இவ்வாறே இரவு முழுக்க காதல் பேசி நடப்பேன் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.

 
               மலையை சுற்றி முடிக்கவும் கிழக்கு வானில் கதிரொளி பரவவும் சரியாக இருந்தது, கால்வலி உயிர் போனது. ஒருவழியாக முடித்துவிட்டோம் இனி வீடு திரும்பலாம் என்றெண்ணும் போது ஒரு அதிர்ச்சி, அங்கேயும் பேருந்து நிலையத்தில் ஏகப்பட்ட கூட்டம். பெரும்பாடு பட்டு சென்னைக்கு வரும் பேருந்தில் இடம் பிடித்தோம். அப்படி ஒரு தூக்கத்தை இது வரை நான் போட்டதில்லை அதுவும் பேருந்துப் பயணத்தில். பயண நேரம் முழுவதுமே உறங்கியபடியே வந்து சேர்ந்தோம்.


               வீட்டிற்கு வந்ததும் உடனே குளித்து முடித்து கிழக்கு தாம்பரம் கிறிஸ்துதாஸ் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கே தான் அக்காவை சேர்த்திருந்தார்கள். முதல்மாடியில் அறை கொடுத்திருந்தார்கள், உறவினர்கள் சூழ்ந்திருந்த அந்த அறையின் உள்ளே சென்று பார்த்தேன், அழகாய் ஒரு பெண்குழந்தை. அக்காவுக்கும் மாமாவுக்கும் வாழ்த்து கூறினேன். அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம், சற்று நேரத்தில் பேச்சின் திசை மாறியது. "வீட்டில் பெண் குழந்தை பிறந்தால், அது தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைக்கும்" என்றொரு விசித்திர பழமொழியை, நான் இதுவரை கேட்டறியாத புதுமொழியை கூறி என்னை கேலி செய்ய தொடங்கினர். "அடுத்து உனக்குத் தான் திருமணம் இன்னும் ஆறே மாதத்தில் உனக்கு திருமணம் முடுந்து விடும் பார்", என்றனர். வெட்கம் உள்ளுக்குள் பிடிங்கி தின்றது, இது எந்த ஊர் பழமொழியாக இருக்கும் என்று எண்ணினேன்.


               "எனக்கு இப்போது திருமணம் செய்யும் எண்ணமில்லை, அதனால் திருமணப் பேச்சை விடுங்கள்" எனக்கூறி ஒருவாறு அவர்களை சமாளித்து விட்டு வெளியே வந்து அங்கே போட்டிருந்த இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் உள்ளே இருந்த உறவினர்கள் வெளியே வந்தனர், அவர்கள் கிளம்பிவிட்டனர். என்னிடம் "சென்று வருகிறோம்" எனக்கூறி புறப்பட்டனர். "அப்பாடா", என நிம்மதி அடைந்தேன், இனி உள்ளே திருமணப் பேச்சை எடுத்து எனைக்கிண்டல் செய்து வெட்கப்பட வைக்க யாரும் இல்லை அல்லவா?


               மீண்டும் உள்ளே சென்றேன், அக்காவின் பக்கத்தில் படுத்திருந்தாள் குட்டிக்குழந்தை, அருகே சென்று முகத்தை பார்த்தேன். பால்நிலவை போன்ற பிஞ்சு முகம், சித்திரை பௌர்னமி நாளில் பிறந்தவள்முகம் முழுமதி போலவே தான் இருந்தது. எப்படி அது? வானத்தில் தான் எத்தனை எத்தனை நட்சத்திரம் அரண் அமைத்து நிலவினை  கடுங்காவல் புரிகிறது, இருந்தும் எப்படி அந்த அரணை உடைத்தெரிந்து பூமிக்கு வந்தது இந்த நிலவு? இந்த திங்கள் முகத்தவள் தான் எனக்கு திருமணம் செய்துவைக்கப் போகிறாளாமே, நினைக்கவும் மீண்டும் உள்ளம் குறுகுறுத்தது. அருகே சென்று முத்தம் தந்து மகிழ்ந்தேன்.